Friday, April 12, 2013

அருந்ததி

அருந்ததி தேவி
சந்திரபாகா நதிக்கரையில் தாபஸாரண்யம் என்று பெயருள்ள ஒர் ஆச்ரமம் இருந்தது. அதில் மேதாதிதி என்ற முனிவர் வசித்து வந்தார். அவர் பெரும் வேள்வி நடத்தினார். அவ்வேள்வியின் முடிவில் வேள்வித் தீயிலிருந்து ஒரு பெண் குழந்தை தோன்றியது. முனிவரான மேதாதிதி அக்குழந்தையை அன்புடன் வளர்த்து வந்தார். குழந்தை விளையாட்டில்கூடத் தர்மமான கார்யங்களுக்குத் தடங்கலாக இருந்ததில்லை. ஆகையால் அவளுக்குத் அருந்ததி என்ற பெயர் சூட்டப்பட்டது. குழந்தை அருந்ததிக்கு வயது ஐந்தாயிற்று. ஒரு நாள் பிரம்ம தேவர் மேதாதிதி முனிவரின் அருகில் வந்தார். குழந்தை அருந்ததியை நோக்கினார். மறைந்திருந்த முன்ஜன்ம அறிவுகள் வெளிப்பட வேண்டிய காலம்
வந்ததை அறிந்தார். முனிவரின் சொன்னார். அருந்ததி கல்வி கற்கும் வயதை அடைந்திருக்கிறாள். ஆகையால் இவளை இப்பொழுதே நல்லோழுக்கமுள்ள பத்தினிப் பெண்களிடம் அனுப்ப வேண்டும். அவர்களிடமிருந்தே இவன் ஒழுக்கத்துடந் கூடிய கல்வியைக் கற்க வேண்டும்.
இதைக் கேட்ட முனிவர், குழந்தையிடம் உள்ள பேரன்பினால் குழந்தையைப் பிரிய மனமில்லாதவராக்த சற்று தயங்கினார். இதைக் கண்ட பிரம்மன் முனிவரை நோக்கி நீரும் நானும் படித்தவர் தாம். இருந்தாலும், பெண்களுக்குகந்த கல்வியைப் பெண்கள்தான் கற்பிக்கமுடியும். பெண்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள நாணம், அச்சம், பக்தி, பொறுமை முதலிய நற்குணங்களை உள்ளவர்கள்தான் வர்ணிக்க முடியும். ஆண்கள் பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதால் அப்பெண்கள் ஞானம் முதலிய பெண்களுக்குள்ள சிறப்பான குணங்களை இழந்து ஆண்களுடைய குணங்களைப் பெறுகிறார்கள். பெண்களுக்கு ஒழுக்கமும் நாணமும்தான் முக்கியம். உன் ஆச்ரமத்தில் பெண்கள் கிடையாது. ஆகையால் c இக்குழந்தையைப் சாவித்ரியிடம் அனுப்பு என்று சொன்னார். முனிவர் பிரம்மாவின் கட்டளைப்படி அருந்ததியை அழைத்துக்கொண்டு சூர்யலோகம் சென்றார். சாவித்ரி தேவியைச் சந்தித்தார். சாவித்ரி தேவியும் அருந்ததியை அழைத்துக் கொண்டு மேருமலைக்குச் சென்றார். அங்கே சரஸ்வதி காயத்ரி முதலிய தேவர்களும் வந்திருந்தார்கள். முனிவர் அவர்களை தனித்தனியாக வணங்கினார். பிறகு அவர்களை நோக்கி, தேவியரே இவள் என் பெண் அருந்ததி, பிரம்மனின் கட்டளைப்படி இவளை உங்களிடம் கல்வி கற்க ஒப்புவிக்கிறேன். இவள் தங்களிடமே இருக்கட்டும். தாங்கள் இவளுக்குப் பெண்களுக்கு உசிதமான கல்வியைக் கற்பியுங்கள் என்றார்.
தேவியர் முனிவரே பகவான் விஷ்ணுவின் அருளாள் இவள் முதலிலேயே ஒழுக்கமுள்ளவளாக இருக்கிறாள். பெண்களுக்கு ஒழுக்கம்தான் மிக முக்யம். ஆனாலும் பிரமனின் கட்டளைப்படி இவளை எங்கள் அருகில் வைத்துக்கொள்கிறோம். இவள் முன் ஜென்மத்தில் பிரம்மனின் பெண்ணாக இருந்தாள். உம் தவவலிமையாலும், ஈசனருளாலும் இவளை நீர் மகளாகப் பெற்றீர். இவளால் உலகத்திற்கு அநேக நன்மைகள் உண்டாகும். பெண் உலகத்திற்கே ஒற் எடுத்துக்காட்டாக விளங்கப்போகிறாள் என்றார்கள்.
முனிவர் தம் குழந்தை அருந்ததியை அவர்களிடம் ஒப்புவித்துச் சென்றார். அருந்ததியும் அத்தேவியற்களுக்கு தினமும் பணிவிடை செய்து கொண்டும், கல்வி கற்றுக்கொண்டும் வந்தாள். சில ஆண்டுகள் சென்றன. அருந்ததி திருமணப் பக்குவத்தை அடைந்தாள். ஒரு நாள் வசிஷ்ட முனிவர் அருந்ததியின் ஆசிரமப் பக்கம் சென்றார். தற்செயலாக இருவரும் சந்தித்தார்கள். அருந்ததி நாணமடைந்து உள்ளே ஒடி விட்டாள். இதையறிந்த தேவியர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலிய தேவர்களும் வந்தார்கள். மேதாதிதி முனிவர் வசிஷ்டமுனிவருக்குத் தம் மகள் அருந்ததியைத் தானம் செய்தார். தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். மும்மூர்த்திகளும், மணப்பந்தலில் தம்பதியினரை உட்காரவைத்து நீராட்டினார்கள். அந்நீரே கோமதி, சரயூ முதலிய ஆறுகளாக பெருகிற்று. திருமண காலத்தில் பிரம்ம தேவர் மிக அழகிய விமானமும், விஷ்ணு
அழியாப் பதவியும், ருத்ரர் நீண்ட ஆயுளையும் அளித்தார்கள். வசிஷ்டர், தம் மனைவியுடன் தமக்கென அளிக்கப்பட்ட சப்தரிஷி மண்டலத்தில் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறார். அவர் அருகில் மிகச் சிறு நக்ஷத்திரமாக அருந்ததி தேவி விளங்குகின்றாள். சப்தரிஷி மண்டலத்தில் தம் கனவரை விட்டுப் பிரியாமல் இடம் பெற்று இருக்கும் தேவி அருந்ததி ஒருவள்தான்.
ஒரு சமயம் அக்னி தேவனுடைய மனைவி ஸ்வாஹாதேவி, அருந்ததியைப்போல உருவம் எடுக்க விரும்பினாள். எவ்வளவு முயற்சி செய்தும் அருந்ததியைப்போல உருவம் எடுக்க முடியவில்லை. இதற்குமுன், அநேக முனிவர்களின் மனைவியைப்போல உருவம் எடுத்திருக்கிறாள். ஒருவரைப்போல் நாம் ஆகவேண்டுமானால் முதலில் அவர்களுடைய குணங்களைப் நாம் பெற வேண்டும். குணத்தை அடைந்த பிறகே நாம் அவர்களைப்போல் ஆகமுடியும். அருந்ததியோ மஹா உத்தமி. ஒழுக்கத்தை உயிரினும் மேலாக மதிப்பவள். ஸ்வாஹாதேவி அருந்ததியிடம் சென்று கைகூப்பிச் சொன்னாள். தேவி நீங்கள் ஒருவர்தான் பதிவ்ரதா தர்மத்தைச் சரியான முறைப்படி அனுஷ்டிக்கிறீர்கள். தங்களைப் போன்ற உத்தம பத்தினியை நான் இதுவரை பார்த்ததே இல்லை. எந்தப்பெண் திருமண காலத்தில் அக்னி, அந்தணன் இவர்களுக்கு முன்னால் கணவனின் கையைபிடிக்கும் சமயம் உங்களை நினைக்கிறாளோ, அவள் நீண்டகாலம் கணவனுடன் சுகத்தையும், புத்திரனையும், செல்வத்தையும் அடைவாள். நான் எனது அல்ப புத்தியினால் உங்களைப்போல் உருவத்தை அடைய எண்ணினேன். ஆனால் என்னால் முடியவில்லை. என்னை மன்னிக்கவேண்டும் என்று வணங்கிச் சொன்னாள். இதனால்தான் திருமணக்காலத்தில் அருந்ததியைப் பார்க்கின்றார்கள். நல்லோரைக் காண்பது நல்லதல்லவா.
ஒரு சமயம் இந்திரன், அக்னி, சூரியன், இம்மூவரும் பதிவ்ரதா தர்மத்தைச் சோதிப்பதற்காக அருந்ததியின் ஆச்ரமத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அருந்ததி நீர் எடுத்துவர, குடத்தை எடுத்துக் கொண்டு நதியை நோக்கிச் சென்றுகொம்டிருந்தாள். எதிரில் தேவர்களைக் கண்டு வணங்கினாள். வருகையின் காரணம் வினவினாள். தேவர்கள் எங்களுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக தங்களிடம் வந்துள்ளோம் என்றாகர்கள். அருந்ததி சற்ரு இவ்வாசனத்தில் அமருங்கள் நான் நதியிலிருந்து ஜலம் கொண்டுவந்தபின் உங்களுடைய சந்தேகத்தைத் தீர்க்கிறேன் என்றாள். தேவர்கள் எங்களுடைய சக்தியால் இக்குடத்தை நிறப்பிவிடுகிறோம் என்றார்கள். அருந்ததி குடத்தை கீழே வைத்தாள். இந்திரன், அக்னி, சூர்யன் மூவரும் எவ்வளவு முயற்சி செய்தும் அக்குடத்தை நிரப்பமுடியவில்லை. மூவரின் சக்தியால் முத்தால் குடம்தான் நிறைந்தது. தேவர்கள் தங்களால் முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். அருந்ததி தனது பதிவ்ரதா மகிமையால் அக்குடத்தை நிரப்பினாள். தேவர்கள் சந்தேகம் தெளிந்தவர்களாய் பதிவ்ரதையை வணங்கிச் சென்றனர். பத்தினிப் பெண்ணின் பெருமை தேவர்களின் பெருமையைவிட மிக உயர்ந்தது. பத்தினிப் பெண்களால்தான் நம் தேசம், தர்மம் இவை முன்னேர வேண்டும்.

பரசுராம அவதாரம்


பெருமாளின் அவதாரங்களில் இது 6வது அவதாரமாகும்:ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகாவுக்கும் மகனாக எடுத்த அவதாரம் பரசுராமன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதை உலகத்திற்கு உணர்த்திய அவதாரம். இன்றும் மகேந்திர மலையில் சிரஞ்சீவியாக தவம் செய்து கொண்டிருக்கிறார்.
பிரம்மதேவருடைய புத்திரர் அத்திரி மகரிஷி. அவருக்கு ஒருநாள் ஏற்பட்ட ஆனந்தக் கண்ணீரில் உதித்தவன் சந்திரன். அவனை பிரம்மா, பிராமணர்கள், ஒளஷதி மற்றும் நட்சத்திரங்களுக்கு அதிபதி ஆக்கினார். இந்த சந்திர வம்சத்தில் தோன்றியவர்களில் காதிராஜன் என்ற மன்னன் பிரசித்தி பெற்றவன். அவனுக்கு சத்தியவதி என்ற பெண் பிறந்தாள். அந்தப் பெண்ணை பிருகு புத்திரரான ரிசிகன் என்ற பிராமணன் தனக்குத் திருமணம் செய்து கொடுக்கும்படி யாசித்தான். சத்தியவதிக்கு இவன் ஏற்ற கணவன் அல்ல என்று எண்ணிய காதிராஜன், எப்படியாவது அவனைத் தட்டிக் கழிக்க ஓர் உபாயம் செய்தான். அவன் ரிசிகனைப் பார்த்து, பிராமணரே! நீர் என் பெண்ணுக்கு நான் கேட்கும் பொருளைக் கன்னிகா தானமாகத் தரமுடியுமா? என்று வினவினான். என்ன திரவியம் கேட்கிறீர், சொல்லும் என்றான் ரிசிகன். ஆயிரம் குதிரைகள் நீர் கொண்டு தர வேண்டும். அந்தக் குதிரைகளின் காதுகளில் ஒன்று பச்சைப் பசேல் என்றிருக்கும். மற்ற அங்கங்கள் எல்லாம் மிகவும் தூய வெள்ளையாக இருக்கும். இப்படிப்பட்ட தெய்வ ஜாதி குதிரைகளைக் கொண்டு வந்து கொடுத்தால் நீர் திருமணம் செய்ய நான் சத்தியவதியைக் கன்னிகாதானம் செய்கிறேன் என்றான் காதிராஜன். ரிசிகன் நேரே வருணனிடம் சென்று அப்படிப்பட்ட குதிரைகள் பெற்றுக்கொண்டு வந்து காதிராஜன் முன்பு நிறுத்தினான். இதைக் கண்டதும் காதிராஜன், ஆகா! நான் எது சாத்யமாகாது என்று நினைத்துச் சொன்னேனோ அதனையே இவன் எளிதாகச் செய்து முடித்து விட்டான். இனியும் இவனைப் பரிசோதனைக்கு ஆளாக்கினால் ஓர் அந்தணனுடைய சீற்றம், சாபங்களுக்கு இலக்காக நேரிடும்! என்று சிந்தித்தான். சத்தியவதியை அவனுக்குத் திருமணம் செய்து தந்தான். கொஞ்ச காலம் சென்றதும் சத்தியவதிக்கு தனக்கு ஓர் உத்தமமான பிள்ளை பிறக்க வேண்டும் என்று ஆசை வந்தது.
அதே சமயம் சத்தியவதியின் தாய் காதிராஜனுடைய பத்தினிக்கும் அதே ஆசை ஏற்பட்டது. ஆனால் தனக்குப் பிறப்பவன் பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும் என நினைத்தாள். அவர்கள் இருவரின் ஆசைகளையும் நிறைவேற்றும் பொருட்டு ரிசிகன் யாகப் பிரசாதமான இரு கவளை அன்னத்தை வீட்டிற்கு எடுத்து வந்தான். அவைகளில் ஒன்றில் உத்தமமான ஞானக்குழந்தை பிறக்குமாறு மந்திர உச்சாடணம் செய்தான். மற்றொன்றில் தன் மாமியார் விரும்பும் பராக்கிரமம் மிகுந்த பிள்ளை பிறக்க வேண்டும் என்று மந்திர ஆவாகனம் செய்தான். உத்தமனும் ஞானியும் பிறக்குமாறு ஓதிய முதல் கவளை அன்னத்தை விவரமாகச் சொல்லி சத்தியவதியை உண்ணும்படி சொன்னான். மற்ற ஒன்றை தன் மாமியாரிடம் கொடுக்கும்படி சொன்னான். அன்னக் கவளைகளை அளித்து விட்டு ரிசிகன் ஆற்றுக்கு குளிக்கப் போனான். உள்ளூர தனக்கு ஒரு அந்தணனாக ஞானியாகப் பிள்ளை பிறப்பான் என்றும், தன் மாமியாருக்கு பராக்கிரமம் மிக்க க்ஷத்திரிய வீரன் பிறப்பான் என்றும் நம்பிக்கை இருந்தது. குளித்து விட்டு வீட்டுக்கு வந்தான்.ரிசிகனுக்குப் பிள்ளையாக ஜமதக்னி பிறந்தார். சத்யவதி பின்னர் தன் வாழ்க்கையைத் துறந்து கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணு என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வசுமனன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவன் கடைசியாகப் பையனாகப் பிறந்தார். அவன் பரந்தாமனுடைய அம்சமாக அவதரித்தான். அவனே பூலோகத்தில் இருபத்தொரு க்ஷத்திரியப் பரம்பரையை வேரோடு அழித்தவன். இவன் சிவபெருமானை நோக்கித் தவம் செய்து பரசு என்ற கோடரியைப் பெற்ற காரணத்தால் இவனுக்குப் பரசுராமன் என்ற பெயர் ஏற்பட்டது. தாய் தந்தையரிடம் மிகவும் அன்பு கொண்டவன் பரசுராமன். ரேணுகாதேவியின் மற்றொரு பெயர் சீலவதி என்பதாகும். அவள் தன் கணவனைத் தவிர உலகில் வேறு தெய்வமே கிடையாது என்ற கொள்கையும் நினைப்பும் கொண்டவள். தினமும் அவள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அங்கே மண்ணைக் கையில் எடுத்துப் பிசைவாள். நான் கற்புக்கரசி என்பது உண்மையானால் நான் பிசைந்த மண் அழகியதொரு மண்குடமாக மாறட்டும்! என்பாள். அது குடமாக மாறும். பின்பு அதில் தண்ணீர் மொண்டு வருவாள். இது அவளுக்கு வாடிக்கை. இப்படிக் கொண்டு வந்த தண்ணீரைத்தான் அவள் கணவராகிய ஜமதக்னி முனிவருடைய பூஜைக்கு வழங்குவாள்.
சூரிய குலத்திலே கேகய நாட்டை ஆண்டு வந்த கிருதவீரியன் என்பவனுக்கும் சுனந்தை என்பவளுக்கும் கார்த்தவீர்யார்ச்சுனன் என்பவன் பிறந்தான். அவன் பிறக்கும் போது கைகள் கிடையாது. அதைக் கண்டு பெற்றோர்கள் மிகவும் வருந்தினார்கள். தன் கையிலாக் குறை நீங்க கார்த்தவீர்யார்ச்சுனன் தத்தாத்திரேயரையே உபாசித்து வந்தான். தத்தாத்திரேயர் என்பவர் அத்திரி முனிவருடைய புதல்வர். அத்திரிமுனி பரந்தாமனிடம் அவரே வந்து தனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என விரும்பினார். ஆகவே ஸ்ரீஹரி அம்சமாகத் தத்தாத்திரேயர் அவதரித்தார். அவரைத் தான் அவன் வழிபட்டு வந்தான். அவரை நோக்கித் தவம் செய்த காரணத்தால் அவனுக்கு ஆயிரம் கைகள் முளைத்தன. அதுமட்டுமல்ல. அவனைக் கண்டால் பகைவர்கள் பயப்படும் தன்மையையும் இந்திரிய சக்தி, செல்வம், பொருள் மற்றும் யோகஞான சக்திகளையும் அவன் பெற்றான். இத்தகைய சீரும் சிறப்பும் பெற்றதினால் மிகுந்த செருக்குடன் இருந்தான். தத்தாத்திரேயரிடம் பெற்ற வரத்தால் அவன் காற்றைப் போல எங்கும் தடையின்றித் திரியும் வல்லமையும் பெற்றிருந்தான். அதனால் மூன்று உலகங்களிலும் சஞ்சரித்து வந்தான். ஒரு சமயம் நர்மதா நதியில் தன் பத்தினிகளுடன் நீராடச் சென்றான். தன் ஆயிரம் கைகளால் நீரை ஏரி போல் தேக்கி அதில் நீராடி மகிழ்ந்தனர். நதியின் மேற்புறமாக திக் விஜயம் செய்வதற்காக இராவணன் ஆற்றில் வெள்ளமே இல்லாத இடத்தில் தன் லிங்கத்தை வைத்து சிவபூஜை செய்தான். நீராடி முடித்ததும் கார்த்தவீரியார்ச்சுனன் தான் அணைபோல் வைத்திருந்த தன் ஆயிரம் கைகளை எடுத்ததான். அப்போது நீர் வேகமாக பிரவாகம் எடுத்து பூஜை செய்து கொண்டிருந்த ராவணனின் பொருட்களை அடித்துச் சென்றது. இதை அறிந்த ராவணன் கார்த்தவீரியனோடு சண்டைக்குப் போனான். கார்த்தவீரியனோ ராவணனை தோற்கடித்து தன் பட்டணமான மாகிஷ்மதிக்குக் கொண்டு சென்று சிறைவைத்தான். இதை அறிந்த புலஸ்தியர் கார்த்தவீரியனை மிகவும் வேண்டிக் கொண்டு ராவணனை மீட்டுச் சென்றான்.
ஒரு நாள் தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வேட்டையாடப் போனான் கார்த்தவீரியன். வேட்டையை முடித்துவிட்டு திரும்புகையில் ஜமதக்னி முனிவருடைய ஆசிரமத்திற்கு வர நேர்ந்தது. பசியால் வாடிய அவர்களைக் கண்ட முனிவர் அறுசுவை உண்டியும், பானமும் கொடுத்தார். மற்றும் பல சவுகர்யங்களையும் செய்து கொடுத்தார். தவிர ஆசிரமத்தில் ஏராளமான செல்வமும் இருப்பது கண்டு கார்த்தவீரியனுக்கு பெரிய ஆச்சர்யம் ஏற்பட்டது. முனிவர் ஆசிரமத்தில் நின்ற தேவ பசுவாகிய காமதேனுவால்தான் அவருக்கு அனைத்தும் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டான். அந்த பசுவை ஜமதக்னி முனிவரிடம் தனக்கு பரிசாகத் தரும்படிக் கேட்காமல் முனிவரும், அவர் பிள்ளைகளும் இல்லாத சமயத்தில் சேவகர்களை அனுப்பி அதைத் தூக்கிக் கொண்டு சென்றான். முனிவர் ஆசிரமத்திற்கு திரும்பி வந்த நேரம் காமதேனு அங்கு இல்லை. கார்த்தவீரியன் தான் அதை கவர்ந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த முனிவர், தனது புதல்வர் பரசுராமரிடம் கூறினார்.  இதைக் கேள்விப்பட்ட பரசுராமர் தன் கோடாரி, வில், அம்புகளுடன் நேரே கார்த்தவீரியன் பட்டணமான மாகிஷ்மதிக்கு விரைந்தார். அங்கே கார்த்தவீரியனின் சேனைகள் அனைத்தையும் அழித்தார். கார்த்தவீரியனும் அவருடன் சண்டைக்கு வந்தான். ஆயிரம் கைகளில் ஐந்நூறு வில் ஏந்தி பாணக்கூட்டத்தை அவர் மீது வீசினான். அவனுடைய ஆயிரம் கைகளையும் பரசுராமர் தன் தபோ பலத்தால் அறுத்து எறிந்ததோடு, அவனுடைய சிரசையும் சீவித் தள்ளினார். பிறகு காமதேனுவையும் அதன் கன்றையும் மீட்டு ஆசிரமத்தில் சேர்ப்பித்தார் பரசுராமர். நடந்ததை எல்லாம் தன் தந்தையிடம் தெரிவித்தார். அதைக் கேட்டு அவர் மிகவும் வருந்தினார்.
ராமா, காரணம் இல்லாமல் ஓர் அரசனைக் கொன்று விட்டாயே! அரசனைக் கொல்வது ஓர் அந்தணனை வதை செய்வதைவிடக் கொடிய குற்றம். அரசன் என்பவன் ஆண்டவனின் அம்சம் என்று சாஸ்திரங்கள் பறைசாற்றுகின்றன. செய்த தீமையை மறந்து தீயவர்களை மன்னிப்பது தான் பிராமண தருமம். மேலும் நாம் பொறுமையை கடைபிடிப்பதால் தான் அனைவராலும் பூஜிக்கப்படுகிறோம். இத்தகைய பெரிய பாவத்தை செய்ததற்கு பிராயச்சித்தமாக தீர்த்த யாத்திரைக்குப் போய் பல புண்ணிய ÷க்ஷத்திரங்களை தரிசனம் செய்துவிட்டு வா! என்றார். தந்தையின் அறிவுரை கேட்டு அதன்படி பரசுராமர் ஓராண்டு காலம் தல யாத்திரை செய்தார். பிறகு ஓர் நாள் நீர்நிலைக்குச் சென்ற ரேணுகாதேவி தரையில் குனிந்து குடம் செய்வதற்குரிய மண்ணை அள்ளினாள். அப்படி அள்ளும் போது ஓர் தேவபுருஷன் உருவம் நீரில் நிழலிடுவதைக் கண்டாள். இது யார் என்று சற்று மேலே உற்றுப் பார்த்தாள். கற்பின் நிறைக்குப் பதில் களங்கம் தெரிந்தது. கூட்டி எடுத்த கை மண்குடம் ஆகவில்லை. ஜமதக்னி முனிவர் தன் பூஜைக்குத் தண்ணீர் கொண்டுவரச் சென்றவள் இன்னும் வரவில்லையே என்று சிந்தித்தார். தன் ஞானக் கண்ணால் அவள் கற்புக்கு களங்கம் ஏற்பட்டதை அறிந்தார். சினம் பொங்க தன் புதல்வர்களை வரவழைத்து அழுக்கு உள்ளம் கொண்ட தாயைக் கொல்லுமாறு கர்ஜித்தார். மற்ற பிள்ளைகள் அனைவரும் தயங்கினர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கேற்ப பரசுராமர் தன் பரசு என்ற ஆயுதத்தை எடுத்தார். அன்னையின் மீது வீசினார். அவள் தலை கீழே விழுந்தது. கூடவே சகோதரர்களின் தலைகளும் உருண்டன. ஜமதக்னி முனிவருக்கு சாந்தம் வரவில்லை என்றாலும் தன் சொல்லைக் காப்பாற்றிய பிள்ளையை ஏறிட்டு பார்த்தார். ராமா! உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். பரசுராமர் பகவான் அம்சம். ஒரு பிரச்சனைக்குரிய பரிதாபமும் பாவப்பட்டதுமான அவதாரம் ஆயிற்றே. இறந்த என் தாயும் சகோதரர்களும் உயிரோடு எழ வேண்டும். அதோடு நான் அவர்களைக் கொன்றேன் என்ற நினைப்பின் நிழல்கூட அவர்களுக்குத் தெரியக்கூடாது என்று வரம் கேட்டார். மறுபடி அன்னை உயிர்த்தெழுந்ததை முன்னிட்டு ரேணுகாதேவியேதான் மாரி அம்மன் என்றும், தலை மட்டும் மாரியம்மன் கோயில்களில் வைத்து பூஜிக்கப்படுவதற்கு பரசுராம அவதார நிகழ்ச்சியே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஜமதக்னி முனிவர் சம்பதக்கினி முனியானார். இறந்த தாயும் சகோதரர்களும் உயிர்பெற்று எழுந்தனர். தூங்கி விழித்தது போன்ற உணர்வு தவிர வேறு முந்திய நிகழச்சி எதுவும் அவர்கள் நினைவில் இல்லை. தம் தந்தையை இழந்த கார்த்தவீரியன் புதல்வர்கள் ஜமதக்னி முனிவரிடமும், பரசுராமரிடமும் பகைமை பாராட்டி வந்தார்கள். அதனால் பழிக்குப் பழி வாங்க தீர்மானித்தார்கள்.
ஒரு நாள் ஜமதக்னி முனிவர் ஆழ்ந்த நிஷ்டையில் இருந்தார். பரசுராமனும் தன் சகோதரர்களுடன் ஆசிரமத்தை விட்டு வெளியே போயிருந்தான். ரேணுகா தேவி மட்டும் ஆசிரமத்தில் இருந்தாள். அப்போது ஆசிரமத்தில் கார்த்தவீரியனின் புதல்வர்கள் ரகசியமாக நுழைந்தனர். அவர்களில் ஒருவன் கையில் வெட்டரிவாளுடன் முனிவர் பக்கம் போகும் போதே ரேணுகா தேவி சிரசு வெடிக்கும்படி கதறினாள். அரசகுமாரர்களே! அவர் ஓர் அந்தண சிரேஷ்டர். மகா முனிவர். தயவுசெய்து அவரை வெட்டி வீண்பழிக்கு ஆளாகாதீர்கள் என்று அலறினாள். நச்சுப்பகை கொண்ட அந்த ராஜன்மார்களுக்கு அவளுடைய கூக்குரல் நரகமாக இருந்தது. ஓங்கின வாள் மேலும் உயர்ந்தது. ஒரே வெட்டு, ஜமதக்னி முனிவர் தலை தரையில் உருண்டது. சீலவதியின் கண்ணீர் ரத்தமும் கரை புரண்டு தரையை மட்டுமா நனைத்தது? தரும தேவதைகளையும் தலை முழுகச் செய்தது. கொய்த தலையை கொடியவர்கள் கொண்டு போனார்கள். அவளுடைய அலறலைக் கேட்டு பரசுராமர் ஓடோடி வந்தார். நடந்ததை அறிந்தார். அவரது நாடி நரம்புகள் துடித்தன. அப்பொழுதே இந்தக் கொடிய க்ஷத்திரியப் பூண்டை அடியோடு அழிப்பேன் என்ற சபதம் எடுத்தார்.  பரசுராமர் மாகிஷ்மதி நகருக்கு விரைந்தார்.அரச குமாரர்களின் தலைகளை அறுத்து மலைகளாகக் குவித்தார். ரத்த ஆறு ஓடியது. குரு÷க்ஷத்திரத்தில் இருந்த குளங்களில் தண்ணீருக்குப் பதிலாக இரத்தம் நிரம்பி வழிந்தது. தன் தகப்பனார் தலையைக் கொண்டு வந்து உடலுடன் சேர்ந்தார். ஈமச் சடங்குகளைச் செய்தார். பூமியில் உள்ள க்ஷத்திரிய வம்சம் அற்றுப் போகும்படி இருபத்தொரு திக்விஜயம் செய்து வேரறுத்தார். அந்தப் பாவம் தீர வேள்வி செய்தார். அந்த வேள்வியில் கிழக்குத் திசையை அத்துவரியவுக்கும், வடக்கை உதகாதாவுக்கும், மத்திய தேசத்தை ஆசியபருக்கும், ஆரிய வர்த்தத்தை உபதிரஷ்டாவுக்கும் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தை சதசியர்களுக்கும் அளித்தார். சரஸ்வதி நதியில் சுபவிருத ஸ்நானம் செய்தார். பரசுராமரால் பூஜிக்கப்பட்ட ஜமதக்னி முனிவர், ஞான தேசம் பெற்று சப்தரிஷி மண்டலங்களில் ஏழாவது ரிஷியாக விளங்கினார். தற்சமயம் அவர் மகேந்திர பர்வதத்தில், சித்தர்கள் கந்தர்வர்கள் ஆகியோரால் பாராட்டும் புகழும் பெற்று அங்கு தவக்கோலத்தில் சிரஞ்சீவியாக இருக்கிறார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. ராமஅவதாரத்திற்கு முன்பு சூர்ய குலத்தில் பிறந்தவன் மூலகன் என்ற அரசன். பூலோகத்தில் அப்போது ராஜவம்சம் இல்லாமல் அழித்துவிட பரசுராமர் புறப்பட்டார். பெண்கள் பலர் மூலகனைச் சூழ்ந்து நின்று கொண்டு பரசுராமர் கண்ணில் படாதவாறு காப்பாற்றினார்கள். அதனால் அவனை நாரிவசன் என்றும் அழைப்பர். க்ஷத்திரிய வம்சம் பூண்டோடு போன பின்பு அந்த வம்சத்தை தழைக்கச் செய்தவன் மூலகனே. மூலகனுக்குப் பின்னர் தசரதன், அளபடி, கட்டுவாள்கள், தீர்க்கபாடு, ரகு, அவன் மகன் அஜன். இந்த அஜனின் மகன் தான் ராமரின் தந்தையான தசரதன். இப்படித் தான் க்ஷத்திரய வம்சம் மீண்டும் தழைக்க ஆரம்பித்தது.
ராமாவதாரத்தில் பரசுராமர்: ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில் பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவதையும் ராமபாணத்திற்கு இரையாக்கிவிட்டு, தாம் பிராமணர் என்ற நிலையில், நீ எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார் பரசுராமர். இலங்கையின் அசோகவனத்தில் சீதை சிறை இருந்த சமயம் இதை நினைவுபடுத்தி ராவணனுக்கு புத்திமதி கூறுகிறாள். தூர்த்தனே! கார்த்த வீரியார்ச்சுனனுக்கு ஆயிரம் கைகள் இருந்தன. அவன் உனது இருபது தோள்களையும் பிடித்து உலுக்கி சண்டையிட்டு வென்றான். அப்பேற்பட்ட கார்த்தவீரியனைப் பரசுராமர் கொன்றார். அதே பரசுராமர் என் பர்த்தவிடம் தோற்றுப் போனார். ஆகையினாலே மகாவீரராகிய எனது கணவருடைய வீரம், புகழ், பெருமை இவைகளை நீ அறியாமல் என்னிடம் வம்பு செய்யாதே. மீறி நீ செய்தால் அழிந்து விடுவாய்! ஜாக்கிரதை என்கிறாள் சீதாப்பிராட்டி.
மகாபாரதத்தில் பரசுராமர்: காசிராஜாவிற்கு அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்று மூன்று பெண்கள். இவர்களுக்கு சுயம்வரம் செய்து வைக்க காசிராஜன் ஏற்பாடு செய்தார். பீஷ்மர் அந்த மண்டபத்திற்கு வந்தார். இந்த மூன்று பேர்களையும் கவர்ந்து வந்தார். அவர்களில் அம்பிகை, அம்பாலிகை இருவரையும் தன் தம்பி விசித்திர வீரியனுக்குத் திருமணம் செய்து வைத்தார். அம்பையோ பீஷ்மருடைய தம்பியைத் திருமணம் செய் மறுத்து விட்டாள். தான் சாலுவ மன்னனை விரும்புவதாகக் கூறினாள். அதனால் பீஷ்மர் அவளைச் சாலுவனிடம் அனுப்பினார். ஆனால் அவனோ அவளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவனிடமிருந்து திரும்பிய அம்பை மீண்டும் பீஷ்மரை சந்தித்தாள். சாலுவ மன்னன் என்னை மணம் செய்து கொள்ள மறுக்கிறான். ஆக சுயம்வரத்தின் போது என்னைக் கவர்ந்து வந்த நீர்தான் என்னைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினாள். பீஷ்மரோ தாம் ஏற்கனவே திருமணம் செய்து கொள்வதில்லை என சபதம் ஏற்றிருப்பதால் தாம் அவளை மணம் செய்து கொள்ள முடியாது என வருத்தம் தெரிவிக்கிறார். பீஷ்மர் தன்னை மணக்க மறுத்ததும், அவருக்கு குருவாகிய பரசுராமரை அம்பை அணுகினாள். தங்கள் சீடர் என்னை சுயம்வர மண்டபத்தில் இருந்து தூக்கி வந்து விட்டார். ஆக, அவர் என்னை சம்பிரதாயமாகக் கல்யாணம் செய்வதுதான் க்ஷத்திரிய மரபு. தாங்கள் என்னை அவர் மணந்து கொள்ள உதவி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள். பரசுராமர் அதற்கு சம்மதித்து பீஷ்மரைச் சந்தித்து அம்பையை மணம் செய்யும்படி வற்புறுத்திப் பார்க்கிறார். பீஷ்மர் அதற்கு மசியவில்லை என்ற உடனே போர் செய்தார். பீஷ்மர், நான் காக்கும் விரதத்தை முன்னிட்டு என் குருவுடன் மோதி செத்தாலும் சாவேனே ஒழிய, விரதத்தை மீறி நரகத்திற்குப் போவதற்காக உயிருடன் வாழ மாட்டேன் என்று பரசுராமருடன் ஆவேசமாய் போர் செய்தார். போரில் பரசுராமர் தோற்றார். பின்பு தவம் செய்யச் சென்றார். மகாபாரதத்தில் மற்றொரு சமயமும் பரசுராமர் வருகிறார்.
பரசுராமர் பீஷ்மருக்கும், கர்ணனுக்கும் வில்வித்தை கற்றுக் கொடுத்தார். அதில் கர்ணன் தன்னை ஒரு பிராமணன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் வில்வித்தை கற்றான். காரணம் க்ஷத்திரியர்களைக் கண்டாலே அவருக்குப் பிடிக்காதே. ஒருநாள் கர்ணனுடைய தொடையில் தலை வைத்து பரசுராமர் தூங்கிக் கொண்டு இருந்தார். அதுசமயம் இந்திரன் ஒரு வண்டு உருவம் எடுத்தான். கர்ணனுடைய துடையைத் துளைத்துக் கொண்டே சென்றான். கர்ணனுக்கு ஒரே கடுப்பு, வேதனை. அவன் துடையில் ரத்தம் கசிந்து பெருகிக்கொண்டு இருந்தது. கசிந்த ரத்தத்தின் ஈரம் பரசுராமர் கழுத்தில் படவே தூங்கிக் கொண்டு இருந்த அவர் எழுந்தார். வண்டுக்கடியை வலிதாங்க முடியாத சூழ்நிலையிலும் பொறுத்துக் கொண்டே இருந்த நீ நிச்சயமாக ஒரு பிராமணனாக இருக்கமுடியாது. நீ உண்மையில் ஒரு க்ஷத்திரியன் தானே! உண்மையைக் கூறிவிடு என்று அதட்டிக் கேட்டார் பரசுராமர். கர்ணன் தான் ஒரு க்ஷத்திரியன் என்பதை ஒத்துக் கொண்டான். பொய் சொல்லி அவரை ஏமாற்றியதை அவரால் ஜீரணிக்க முடியாமல் அதற்காக ஒரு சாபத்தை அவர் கொடுத்தார். கர்ணா! நீ என்னிடம் பொய் சொல்லி வில் வித்தையைக் கற்றுக் கொண்டாய். அதனால் நான் கற்றுக் கொடுத்த வில்வித்தை உனக்குத் தக்க தருணத்தில் உதவாமல் போகக் கடவது! என்று சபித்தார். அந்த சாபத்தை குரு÷க்ஷத்திரக்களத்தில் நினைத்து நினைத்து கர்ணன் வருந்தினான். அந்த சாபத்தால் கற்ற வித்தை கர்ணனுக்கு கை கொடுக்கவில்லை என்பதை சொல்லுக்கு வில்லி, உதவாமல் மழுவாளி உரை செய்த சாபத்தை உற உன்னினான் என்று இயம்புகிறார்.
கோயில்கள்: பரசுராமருக்கென்று தனிக் கோயில்கள் ஒரு சிலவே இந்தியாவில் உள்ளன. பரசுராமர் தன் கோடாரியைக் கொண்டு மேற்கு கடற்கரையில் சீர்படுத்திய பகுதியே இன்றைய கேரளா என்பர். பரசுராம ÷க்ஷத்திரம் என இன்றும் அழைக்கப்படுகிறது. திருவனந்தபுரம் விமானநிலையம் அருகே பரசுராமருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் சிக்மகளூர் அருகே நஞ்சன்கட் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கண்டேஸ்வரர் கோயில் பரசுராமர் வழிபட்ட தலமாகும். இது ஒரு சிவாலயம் தன் தாய் ரேணுகாவைக் கொன்ற பாவம் தீர சிவபூஜை செய்வதற்காக பரசுராமர் இங்கு வந்தார். இங்குள்ள கபிலநதியில் நீராடி, சிவலிங்க பூஜை செய்தார். அவர் நதியில் மூழ்கி எழவும் தோன்றிய சுயம்புலிங்கம் இது. பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோரால் இந்த லிங்கம் பூஜிக்கப்பட்டது. இந்த இடத்தில் தான் பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவம் தீர, சிவபெருமான் இட்ட கட்டளையின் படி தவம் செய்தார். இவர் தவமியற்றிய இடத்தில் சாஸ்னா என்ற கல்பீடம் எழுப்பப்பட்டுள்ளது. பீடத்தில் பரசுராமரின் பாதம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பாதங்களுக்கு தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. சாஸ்னா பீடத்தின் முன்புறம், பரசுராமர் கோடாரியுடன் நிற்கும் அழகிய சிற்பம் இருக்கிறது. இந்த பீடம் கண்டேஸ்வரர் கோயிலில் இருந்து அரை கி.மீ. தொலைவில் உள்ளது. பீடத்துக்கு நித்ய பூஜை செய்யப்படுகிறது. இங்கு பூஜை செய்பவர்களுக்கு நோயற்ற ஆரோக்கிய வாழ்வும், நிம்மதியான மனநிலையும் ஏற்படுவதால் இங்கு பக்தர்கள் ஏராளமாக குவிகின்றனர். மேலும் ஒழுக்கம் தவறும் கணவன், குழந்தைகளை ஒழுங்குப்படுத்த வேண்டி, பரசுராமரை வேண்டவும் மக்கள் வருகின்றனர். நஞ்சன்கட் அருகிலுள்ள சிக்மகளூரில் ராமர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் சுவரில், பரசுராமரின் கோடரி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது பாழடைந்து கிடப்பதால் பக்தர்கள் அதிகம் செல்வதில்லை.

Tuesday, April 9, 2013

நளாயினி புராணம்

 நளாயினி வரலாறு
பிரதிஷ்டானம் என்ற ஊரில் தொழுநோயால் அவதியுற்ற கவுசிகன் என்னும் அந்தணரும், அவர் மனைவி நளாயினியும் வாழ்ந்து வந்தனர். கணவன் தொழுநோயாளி என்றிருந்தும் அவன் மனைவி கற்புக்கரசியாய் அவருக்கு அனைத்துப் பணிவிடைகளையும் செய்து கணவர் மனம் கோணாமல் வாழ்ந்து வந்தாள். ஆனால், கவுசிகன் மனைவியைத் துன்புறுத்தி வந்ததுடன் ஒருநாள் அவனைத் தான் விரும்பும் தாசி வீட்டிற்கு எடுத்துச் செல்லுமாறு கூற அவளும் அவனை ஒரு கூடையில் உட்கார வைத்து தூக்கிச் சென்று கொண்டிருந்தாள். வழியில் மாண்டவ்யர் என்ற முனிவர் மன்னன் ஆணையின்படி கழுவேற்றப்பட்ட நிலையில் இருந்தார் என்று மகன் கூறத் தந்தை மாண்டவிய முனிவரின் அந்நிலைக்குக் காரணம் என்ன என்று கேட்டார். அதற்கு மகன் மாண்டவ்யர் சிறுவயதில் பூச்சிகளைப் பிடித்து இம்சை செய்து வந்ததன் பலன் அது என்று கூறினான். மேலும் திருடர்கள் அவ்வூர் மன்னன் அரண்மனையில் திருடிவிட்டு ஓடிவருகையில் முனிவர் கழுத்தில் ஒரு முத்துமாலையைப் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்னால் துரத்தி வந்த அரண்மனை சேவகர்கள் முனிவர் கழுத்தில் முத்துமாலையைக் கண்டு அவரை மன்னன் முன்னிலையில் கொண்டு நிறுத்த, விசாரணையின் போது முனிவர் தவநிலை காரணமாக பேசாதிருக்க அவரைக் கழுவேற்றுமாறு மன்னன் உத்தரவிட, அதன்படி மாண்டவ்யர் கழுவில் ஏற்றப்பட்டு இருந்தார்.
நளாயினி தன் கணவனைத் தாசியின் வீட்டுக்குக் கூடையில் வைத்து சென்றவள், இருட்டின் காரணமாக, அவளது கூடை மாண்டவ்யர் மீது இடிக்க ஏற்கனவே அவதிப்பட்டுக் கொண்டிருந்த முனிவர் தனக்குத் துன்பம் கொடுத்த அவன் சூரியோதயத்தில் தலைவெடித்து இறக்குமாறு சாபம் கொடுத்தார். இதைக்கேட்ட அந்த பத்தினி தான் பதிவிரதை என்பது உண்மையானால் சூரியன் உதிக்கக்கூடாது என்று பதில் சாபம் விட்டாள். உலகம் இருட்டில் மூழ்கிட அதன் காரணத்தை அறிந்த பிரமன் அத்திரிமுனிவர் ஆசிரமம் அடைந்து அவருடைய மனைவியாகிய அனுசூயை என்னும் பதிவிரதையிடம் நடந்த விவரங்களைக் கூறி நளாயினியைச் சந்தித்து எப்படியாவது சூரியோதயத்திற்கு வழிவகுக்குமாறு வேண்டினார். அனுசூயை அவ்வாறே நளாயினியின் இல்லம் அடைந்து அவளிடம் வந்த காரியத்தைக் கூறி அவள் சாபத்தை விலக்கிக் கொண்டு சூரியோதயம் ஏற்பட்டு உலகம் உய்யுமாறு தெரியுமாறு வேண்டிக்கொண்டாள். ஆனால் நளாயினி சூரியோதயமானால் கணவர் இறப்பார் என்று கூற கற்புக்கரசி அனுசூயை உன் கணவன் இறந்தாலும் நோய் நீங்கி அழகிய ஆண்மகனாய் எழுந்திருப்பார். நீயும் இன்ப வாழ்க்கை அடைவாள் என்று கூறி மகிழ்வித்தாள்.
சாபம் விலக சூரியன் உதிக்க, நளாயினியின் கணவர் இறந்துவிட, அனுசூயை இறந்தவர் ஆணழகனாக உயிர் பெறுமாறு கூற அவ்வாறே நிகழ நளாயினி, கணவருடன் இனிய வாழ்வு பெற்றாள். இதிலிருந்து பதிவிரதையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தேவர்களும், மும்மூர்த்திகளும் அருள்புரிவார்கள் என்று உணர இக்கதை கூறப்பட்டுள்ளது.

Sunday, April 7, 2013

சத்யவான், சாவித்ரி கதை


காரடையான் நோன்பு (சாவித்ரி விரதம் )

கணவனும் மனைவியும் மனமொத்த தம்பதியராக வாழ்ந்து இல்லற தர்மங்களை கடைபிடிப்பது சிறப்பானதாக கூறப்படுகிறது. மனைவி, மக்களை பாதுகாத்து அற வாழ்வு நடத்தி வரும் குடும்பத் தலைவன் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும். இல்லற தர்மத்தை சிறப்பாக கடைபிடிக்கிற வகையில் தான் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிற வகையில் சுமங்கலிப் பெண்கள் இருக்கும் விரதமே காரடையான் நோன்பு. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், இமாசலப் பிரதேசம் உள்பட பல மாநிலங்களிலும் சுமங்கலி பெண்கள் நோன்பிருக்கும் நாள் ‘கர்வா சவுத்’ எனப்படுகிறது.மாசியும், பங்குனியும் சேரும் வேளையில் தமிழகத்தில் இது ‘காரடையான் நோன்பு’ என்ற பெயரில் கடைபிடிக்கப்படுகிறது. கவுரி விரதம், காமாட்சி விரதம், சாவித்ரி விரதம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விரதம் முழுக்க முழுக்க பெண்கள் தொடர்பான விரதம். தங்கள் மாங்கல்ய பலம் கூடுவதற்காக பெண்கள் மேற்கொள்ளும் நோன்பு.

சத்யவான், சாவித்ரி கதையே இந்த விரதம் தோன்ற காரணமானது.அஷ்வபதி மன்னனின் மகள் சாவித்ரி. எதிரிகளிடம் நாட்டை பறிகொடுத்த சால்வ நாட்டு மன்னனின் மகன் சத்யவான். சொத்து, சுகங்கள் அனைத்தையும் இழந்ததால் காட்டில் விறகு வெட்டி வந்தான். அவனை விரும்பி திருமணம் செய்து கொண்டாள் சாவித்ரி. இருவரும் காட்டிலேயே வாழ்ந்து வந்தனர்.இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்துகொண்டிருந்தது. சத்யவானுக்கு ஆயுள் குறைவு என்றும், இன்னும் ஒரு வருடம்தான் உயிர் வாழ்வான் என்றும் தேவரிஷி நாரதர் மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்தாள் சாவித்ரி. கணவனின் நீண்ட ஆயுளுக்காக காட்டிலேயே விரதம் இருக்க ஆரம்பித்தாள். நாரதர் குறிப்பிட்ட நாள் வந்தது. கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி நோன்பிருந்த அவள் தனது விரதத்தை முடித்திருந்த தினம் அன்று. மாசி முடிந்து பங்குனி மாதம் பிறக்கிற நேரம். மங்களகரமான அந்த நேரத்தில் தனது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டி சாவித்ரி விரதம் முடித்திருந்தாள்.
அன்று மாலை சத்தியவானுக்கு கடும் தலைவலி ஏற்பட்டது. அவன் அப்படியே மனைவியின் மடியில் சாய்ந்தான். அந்நேரத்தில், சிவந்த கண்களுடன் பாசக்கயிறு ஒன்றுடன் ஒரு உருவம் தென்பட்டது. நீங்கள் யார்? என்றாள் சாவித்திரி.
நீ பதிவிரதை என்பதால் உன் கண்ணுக்குத் தெரிந்தேன். நான் எமதர்மராஜா. உன் கணவனின் ஆயுளைப் பறிக்க வந்தேன், என்றவன் சற்றும் தாமதிக்காமல் அவனது உயிருடன் கிளம்பினான். சாவித்திரி பின் தொடர்ந்து சென்று, நண்பரே! என்றாள்.நான் உன் நண்பனா? என்ற எமனிடம்,ஒருவன் மற்றொருவனுடன் ஏழு அடிகள் நடந்து சென்றால் நட்புக்குரியவர்கள் ஆகிறார்கள் என்று சான்றோர் சொல்லுவர், என்று பதிலளித்த சாவித்திரியிடம், ‘தெளிவாகப் பேசும் உனக்கு வேண்டும் வரங்களைத் தருகிறேன் கேள். ஆனால் எடுத்த உயிரை கொடுக்க வாய்ப்பில்லை. வேறு ஏதாவது வரம் கேள் தருகிறேன்’ என்றான். சாவித்ரி சாதுர்யமாக ‘வாழையடி வாழையாக என் வம்சம் தழைக்க வேண்டும்’ என்றாள்.

உயிருடன் போகும் அவசரத்தில் இருந்த எமன் சற்றும் யோசிக்காமல், ‘கேட்டதை தந்தோம். உன் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும்’ என்று வரம் தந்து அருளி புறப்பட்டான். ‘‘தர்மராஜரின் வாக்கு பலிக்க வேண்டும். வம்சம் தழைக்க என் கணவனை என்னுடன் அனுப்ப வேண்டும்’’ என்றாள் சாவித்ரி. அவளது பதி பக்தியையும் சாதுர்யத்தையும் எண்ணி வியந்தான் எமதர்மன். சத்யவானுக்கு மீண்டும் உயிர் தந்தான். நீண்ட ஆயுளுடன் வாழுமாறு அவர்களை வாழ்த்தினான். காட்டிலேயே சாவித்ரி மண்ணை பிசைந்து அடைகளாக தட்டினாள். காமாட்சி அம்மனை நினைத்து படைத்து அதையே உண்டு விரதத்தை முடித்தாள். இதன் அடிப்படையிலேயே மண்சோறு உண்ணும் வழக்கம் வந்தது.
இதை நினைவுகூரும் வகையில் முதல் போகத்தில் விளையும் நெல்லை குத்தி (கார் அரிசி) அதில் அடை செய்து அம்பாளுக்கு படைத்து வழிபடுகின்றனர் பெண்கள். இந்நாளில் காமாட்சி அம்மன் படம் வைத்து நெய் விளக்கேற்றி பூரண கும்பம் வைக்க வேண்டும். அதில் தேங்காய், பூ, மாலை சாத்தி பட்டுத்துணி சுற்றி வைக்க வேண்டும். மஞ்சள் சரட்டில் (கயிறு) பசுமஞ்சள், பூ இணைத்து அதன் மீது வைக்க வேண்டும். இந்த கும்பத்தில் வந்து அருளுமாறு காமாட்சி அம்மனை வழிபட்டு, விரதத்தை முடிப்பார்கள். பின்னர் மஞ்சள் சரடு அணிவார்கள். தீர்க்க சுமங்கலிகளாக இருக்கும் வயதான பெண்களை வணங்கி அவர்கள் கையால் சரடு அணிவது சிறப்பு. சிவபெருமானுக்காக உப்பு அடையும் பார்வதி தேவிக்காக வெல்ல அடையும் நிவேதனம் செய்து அதை பிரசாதமாக சாப்பிட்டு ‘உருகாத வெண்ணையும், ஓரடையும் நூற்றேன். மறுக்காமல் எனக்கு மாங்கல்யம் தா’ என்று பிரார்த்தித்து கணவர் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெற்று நோன்பை முடிக்க வேண்டும்.

‘மாசிக் கயிறு பாசி படியும்’ என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் சரடானது பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும்கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்பது ஐதீகம். இன்று மாலைக்கு பிறகு பங்குனி மாதம் பிறப்பதால் மாலை வேளையில் நோன்பை முடித்து சரடு கட்டிக்கொள்ளலாம். இந்த நோன்பு பூஜையை செய்வதால், கணவன், மனைவி இடையே இருக்கும் பூசல்கள் மறையும். ஜாதகத்தில் அஷ்டம ஸ்தான கிரக தோஷங்கள் நீங்கும். பிரிந்தவர் ஒன்று சேருவார்கள். குழந்தை பாக்ய தடை நீங்கி வம்சம் துளிர்க்கும் என்பது ஐதீகம்.